சென்னை மாநகராட்சி தேர்தலில் 122-வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்றவர் ஷீபா வாசு. இவர் 4200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் மாநகராட்சி மேயர் போட்டியிலும் இவருடைய பெயர் இருந்தது. இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். உடல்நல குறைவினால் உயிரிழந்த கவுன்சிலர் ஷீபா வாசுவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்கள் பணியாளராகவும் கழகத்தின் செயல் வீரராகவும் பணியாற்றிய கவுன்சிலர் ஷீபா வாசுவின் மரணம் வேதனை அளிக்கிறது. மேலும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் 122-வது வார்டு உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.