சென்னையில் தினம் தோறும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ பணிகள் என ஏகப்பட்ட கட்டடப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு புதிதாக வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை, சென்ட்ரல், டாக்டர் குருசாமி பாலம், புல்லா அவென்யூ, அண்ணா சாலை மற்றும் மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் ஸ்பீடு ரேடார் கண் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால் கார் மற்றும் மினி வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும், பேருந்து, லாரி மற்றும் டிரக்குகள் போன்ற கனரக வாகனங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆட்டோக்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே குடியிருப்பு பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நவம்பர் நான்காம் தேதி முதல் அதாவது நாளை முதல் அமலில் இருக்கும் என்றும் விதிமுறைகளை மீறினால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.