நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 21 தீவுகளுக்கு  பரம்வீர் சக்கரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டி பிரதமர் மோடி கௌரவித்தார். நான் தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் விவரங்களை தெரிந்து கொள்ள விரும்பினேன்.

அப்போது என்னிடம் 200 சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து கூறினார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இருக்கத்தான் செய்கிறார். தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவிலான வீரர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நமக்கு சுதந்திரம் எளிதாக கிடைத்துவிடவில்லை. இதனால் சுதந்திரத்திற்கு போராடியவர்களை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களின் பெயர்கள் மட்டுமே சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. இதனால் சுதந்திரப் போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று கூறினார்.