கொல்கத்தா நகரில் சாமி வேடமிட்டு மக்களிடம் திருடி வந்த நான்கு பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த அனில் ராம்ஜு சலாத், திரு காலோபாய் சலாத், சமீர் பாய் சலாத் மற்றும் ராஜு குமார் ஆகிய நால்வரும், காளி மற்றும் சிவன் போன்ற தெய்வங்களைப் போல வேடமிட்டு வீதிகளில் உலா வந்துள்ளனர். சிக்னல்கள் மற்றும் சாலை ஓரங்களில் காத்திருக்கும் மக்களிடம் ஆசீர்வாதம் வழங்குவது போலவும், தர்மம் கேட்பது போலவும் பேச்சுக் கொடுத்து, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி செல்போன்கள் மற்றும் பணப்பைகளை அபேஸ் செய்வதை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

​ஜோராசங்கோ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீஸார், ஹேஸ்டிங்ஸ் பகுதியில் வைத்து இந்த ‘சாமி’களைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இவர்கள் கொல்கத்தா மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இதே பாணியில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கிரிஷ் பார்க் பகுதியில் சிக்கிய வேறு சில திருடர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த ரகசியத் தகவல்தான் இந்த கும்பலைச் சிக்க வைக்க உதவியுள்ளது. தற்போது இந்த கும்பலுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.