தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜடி திருப்பதி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி செய்த காரியம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனது கணவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்து, வாக்காளர்களுக்குத் தாராளமாகப் பணத்தை விநியோகம் செய்துள்ளனர். ஆனால், தேர்தல் முடிவில் கணவர் படுதோல்வி அடையவே, ஆத்திரமடைந்த அவரது மனைவி நேரடியாகக் களத்தில் இறங்கிவிட்டார். வாக்காளர்களின் வீடுகளுக்கேச் சென்று, “பணத்தை வாங்கிக்கொண்டு என் கணவருக்கு ஏன் ஓட்டுப் போடவில்லை?” என்று ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

​”என் கணவருக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று சாமி மீது சத்தியம் செய், இல்லையென்றால் ஓட்டுக்காக வாங்கிய பணத்தை இப்போதே திருப்பிக் கொடு” என்று அவர் வீதி வீதியாகச் சென்று சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள், “அரசியல்ல இதெல்லாம் புதுசா இருக்கே!” என்று கிண்டலடித்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறிப் பணம் கொடுத்ததை அவரே பொதுவெளியில் ஒப்புக்கொண்டது போல இந்தச் சம்பவம் அமைந்துள்ளதால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.