சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில்  சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வருகிற 17-ஆம் தேதி காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ படித்த இளைஞர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு தங்களது குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, கல்வி சான்று, அடையாள அட்டையுடன் இந்த முகாமில் கலந்துகொண்டு தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம். இந்த முகாம்களில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்ப படிவம் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் போன்றவை வழங்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.