
சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்தார். இவர் திருத்தணி கோவிலில் சிறுமியை திருமணம் செய்த பிறகு ஒகேனக்கல் சென்று அங்கு சில காலம் தங்கி உள்ளார். இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் சென்னை திரும்பிய சிறுமி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதன் பிறகு சதீஷ்குமாரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில் சிறுமியைப் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் சென்னை போக்சோ நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு சதீஷ்குமாருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறுமியின் விருப்பத்தின் பேரில் தான் அவர் உடலுறவு வைத்ததாக கூறினார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
இதற்கு நீதிபதி சிறுமி மைனர் என்பதால் அவருடைய விருப்பத்தின் பெயரில் மனுதாரர் உடலுறவு வைத்ததாக கூறுவதை ஏற்க முடியாது. அந்த சிறுமிக்கு தற்போது வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. இருப்பினும் அந்த சிறுமியிடம் அவர் நடந்து கொண்டது எப்போது மனதளவில் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மனுதாரர் கடுமையான குற்றத்தை செய்துள்ளார். அவருக்கு 25 வயது ஆவதால் சிறுமியுடன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளை அறியாமல் இருக்க முடியாது. எனவே அவருடைய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் அவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி என தீர்ப்பு வழங்கினார்.