கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் குழந்தை அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது கணவன், மனைவி இருவரும் சிமெண்ட் குழாயை கழற்றி நகர்த்தி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குழந்தை குறுக்கே சென்றதால் சிமெண்ட் குழாயில் குழந்தையின் தலை மோதியதாக தெரிகிறது. இதனால் படுகாயமடைந்த குழந்தையை பெற்றோர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.