சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்.

தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், “RIP கேப்டன். பிரேமலதா மேடம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிறைய அன்பும் வலிமையும். உங்கள் அன்பை நான் என்றென்றும் நினைவில் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.