உறவுகளுக்குள் இருக்கும் ஈகோ (அகங்காரம்) மறைந்து அன்பு வெல்லும்போது, எந்த ஒரு கடினமான சூழ்நிலையும் மாறிவிடும் என்பதற்கு உதாரணமாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு சௌரப் மற்றும் ஷிகா சிங் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து வழக்கு வரை சென்றது. ஆத்திரமடைந்த ஷிகா, தன் கணவர் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கைத் தொடர்ந்து விவாகரத்தும் கோரினார்.

இந்த குடும்பப் பிரச்சனையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஷிகாவின் தந்தைக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்தத் தகவலை அறிந்த கணவர் சௌரப், தன் கோபங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு மாமனாருக்குச் சரியான சிகிச்சை கிடைக்காததை உணர்ந்து, உடனே அவரை குருகிராமில் உள்ள உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையில் அனுமதித்து, தன் சொந்தப் பொறுப்பில் லட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு மகனைப் போல நின்று அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இதனையடுத்து, இவர்களது விவாகரத்து வழக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற அறையில் சௌரப் மற்றும் ஷிகா இருவரும் நேருக்கு நேர் சந்தித்தனர். தன் தந்தையின் உயிரைக் காப்பாற்றி, மருமகனாக இல்லாமல் மகனாக நின்று கடமையாற்றிய கணவனின் பெருந்தன்மையைக் கண்டு ஷிகாவின் இதயம் உருகியது. நீதிமன்ற அறையில் இருந்த அனைவர் முன்னிலையிலும், ஒரு சினிமா பாணியில் தான் கொண்டு வந்திருந்த விவாகரத்து ஆவணங்கள் மற்றும் வழக்குத் தாள்கள் அனைத்தையும் ஷிகா ஆக்ரோஷமாகக் கிழித்தெறிந்தார்.

பின்னர், அழுதுகொண்டே ஓடிச் சென்று தன் கணவர் சௌரப்பைக் கட்டியணைத்துக் கொண்டார். இவர்களது பாசப் போராட்டத்தைக் கண்டு நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி, வழக்கறிஞர்கள் என அனைவரது கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தின் வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி, “ஈகோ இல்லாத காதலே என்றும் வெல்லும்” என்ற வாசகங்களுடன் இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.