தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்து சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசிய பரபரப்பான பேச்சு ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தவெக தலைவர் விஜய் கட்சியின் ஆரம்பக் காலத்திலேயே தங்களுக்குப் போட்ட அதிரடி உத்தரவு குறித்து அவர் மேடையில் வெளிப்படையாகப் பேசியிருப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

​விழா ஒன்றில் பேசிய புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சேவை குறித்தும் தங்களுக்கு வழங்கிய மிக முக்கியமான அறிவுரையைப் பகிர்ந்துள்ளார். தலைவர் விஜய் அவர்கள் இந்த ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னாடியே தங்களுக்கு மிகத் தெளிவான ஒரு வழிகாட்டுதலை வழங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

​அவர் மேடையில் பேசுகையில், “தலைவர் விஜய் அவர்கள் எங்களிடம் முன்பே சொன்ன விஷயம் ஒன்றுதான். ‘இங்கே வந்து பணம் சம்பாதிக்கணும், சொத்து சேர்க்கணும்னு நினைக்கிறவங்க தாராளமா வேற எங்கேயாவது போயிடுங்க. மக்களுக்கு உண்மையாவே சேவை செய்யணும், அவங்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கிறவங்க மட்டும் என் கூட இருங்க’ என்று மிக கறாராகக் கூறிவிட்டார்” என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

​தலைவர் விஜய்யின் இந்த அதிரடி மற்றும் நேர்மையான கொள்கைதான் தங்களை மக்களுக்காக ஓடி ஓடி உழைக்க வைக்கிறது என்றும் தவெகவினர் பெருமிதத்தோடு பகிர்ந்து வருகின்றனர். அரசியலுக்கு வரும்போதே சுயலாபத்தை எதிர்பாராமல், மக்கள் சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற விஜய்யின் இந்த வார்த்தைகள் அடங்கிய வீடியோ, தற்போது தவெக ஆதரவாளர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.