பாடியில் சமையல் பாத்திரத்தில் தலை சிக்கித் தவித்த சிறுவனை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வீட்டிற்குள் இருந்தபோது, அவர்களது சிறுவன் மற்ற இரண்டு குழந்தைகளுடன் சமையல் பாத்திரங்களைக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக, ஒரு பெரிய பாத்திரத்திற்குள் சிறுவன் தனது தலையை நுழைக்க, அது உள்ளேயே சிக்கிக் கொண்டது.

பெற்றோர்கள் நீண்ட நேரம் போராடியும் பாத்திரத்தை அகற்ற முடியவில்லை. குழந்தையின் அழுகுரலால் பதற்றமடைந்த அவர்கள், உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அம்பத்தூர் எஸ்டேட் நிலைய அலுவலர் ஜி. முத்துகிருஷ்ணன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

 

இதுகுறித்து நிலைய அலுவலர் கூறுகையில், நாங்கள் முதலில் சிறுவனின் தலையில் தேங்காய் எண்ணெயைத் தடவினோம். பின்னர் நவீன ‘கட்டர்’  கருவியைப் பயன்படுத்தி, மிகக் கவனமாகப் பாத்திரத்தை வெட்டி எடுத்தோம். சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டான்,” என்றார். மேலும் சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு குழந்தையை மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.