சமையல் கேஸ் தீர்ந்துவிட்ட நிலையில், புதிய சிலிண்டர் வாங்கவோ அல்லது விலையுயர்ந்த அடுப்பு வாங்கவோ வசதி இல்லாத நபர் ஒருவர், மின்சார வாட்டர் ஹீட்டர் கம்பியை வைத்து உணவைச் சமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நபர் ஒருவர் சமையல் பாத்திரத்தில் காய்கறிகள், மசாலா மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து அதில் நேரடியாக மின்சார ஹீட்டர் கம்பியைப் பொருத்துகிறார். வழக்கமாகத் தண்ணீர் சூடுபடுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் இந்தக் கம்பியைக் கொண்டு, அந்த நபர் மிகக் குறுகிய காலத்தில் உணவைச் சமைத்து முடிக்கும் வித்தையைச் செய்து காட்டியுள்ளார்.
View this post on Instagram
இந்த வினோத சமையல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கலவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தரப்பினர், “சவாலான சூழலில் சமயோசித புத்தியுடன் செயல்பட்ட நபரின் கண்டுபிடிப்பு வியக்க வைக்கிறது” என்று நகைச்சுவையுடன் பாராட்டி வருகின்றனர்.
அதே வேளையில், மற்றொரு தரப்பினர் இது மிகவும் அபாயகரமான செயல் என்று எச்சரித்துள்ளனர். “மின்சாரக் கம்பி தண்ணீரில் நேரடியாகச் செயல்படும்போது, பாத்திரத்தில் மசாலா மற்றும் இதர பொருட்கள் இருப்பதால் மின்சாரம் பாய்ந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய செயல்களைப் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இன்ஸ்டாகிராமில் ‘mr.srikanth_94’ என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது பல தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பார்த்து, தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். நவீன கால ‘ஜுகாட்’ என்ற பெயரில் இளைஞர்கள் செய்யும் இத்தகைய விபரீதச் செயல்கள், சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறி வருகின்றன.
