முசாபர்நகர் பகுதியில் மாலையில் வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு தாயையும் மகளையும், ஸ்கூட்டரில் வந்த இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் கேலி செய்துள்ளனர்.

ஆரியமான் மற்றும் ஷௌர்யா குப்தா என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர்கள், பெண்களைப் பார்த்து ஆபாசமாகப் பேசியதோடு அவர்களிடம் தகாத முறையிலும் நடந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண், “நான் போலீஸை அழைக்கப் போகிறேன்” என்று எச்சரித்தபோது, அந்த இளைஞர் எவ்வித பயமுமின்றி ஆபாச வார்த்தைகளால் திட்டி, “போலீஸைக் கூப்பிடு.. பார்த்துக்கலாம்” எனத் திமிராகப் பேசியுள்ளார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலானது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஆரியமான், பாஜக-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான சுதிர் பாலியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகன் மற்றும் அவரது நண்பரைக் கைது செய்துள்ளனர். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இத்தகைய சூழல் குறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.