மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட விரோத குட்கா மற்றும் பான் மசாலா விற்பனையாளர்கள் மொத்த வியாபாரிகள் மீது கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டது. இது குறித்து வருடம் தோறும் அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டு தடை உத்தரவை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சட்ட நடவடிக்கை எதிர்த்து பல நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு அதன் தீர்ப்பில் புகையிலை உணவுப் பொருளாக சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் பான் மசாலா, குட்கா உணவு பாதுகாப்பு ஆணையர் விதித்த தடை ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு ஆணையர்கள் உரிய விதிமுறையின் கீழ்தான் தடை உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது.

மேலும் பான் மசாலா, குட்கா  மற்றும் மெல்லும் புகையிலை போன்றவை இந்தியாவிலும், தமிழகத்திலும் வாய் புற்று நோய்க்கான முதன்மை காரணமாக உள்ளது. அதனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. அதே சமயம் தடையை நீட்டிப்பதை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள சட்டம் விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதா என்பதையும் சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு செய்து வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.