எவரெஸ்ட் சிகரத்தில் பலியானவர்களின் உடல்கள், அங்கு செல்லும் மற்ற மலையேறுபவர்களுக்கு வழிகாட்டும் ‘பாதைகளாக’ அல்லது அடையாளக் குறிகளாக மாறியுள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை உலகையே உலுக்கி வருகிறது.

இது குறிப்பாக ‘கிரீன் பூட்ஸ்’ என்று அழைக்கப்படும் குகைப்பகுதி உலகளவில் மிகவும் பிரபலமானது. கடும் குளிரும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிறைந்த இந்தப் பகுதியில், இந்திய மலையேறுபவர்கள் உட்பட பலர் தங்களின் உயிரை இழந்து அங்கேயே உறைந்து போயுள்ளனர்.

இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய முயலும் மற்ற வீரர்கள், இந்த உடல்களைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்பதால், இவை ஒரு மரணப் பாதையின் அடையாளமாகவே மாறிவிட்டன. இந்த உடல்களை ஏன் மீண்டும் கீழே கொண்டு வர முடிவதில்லை என்ற கேள்விக்கு முதன்மைக் காரணம் அங்குள்ள மிகக் கொடூரமான காலநிலையே ஆகும்.

மேலும் எவரெஸ்ட்டின் ‘மரண மண்டலம்’ என்று அழைக்கப்படும் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில், ஹெலிகாப்டர்களை இயக்குவது சாத்தியமற்றது. மேலும், உறைந்த நிலையில் இருக்கும் ஒரு மனித உடலை அங்கிருந்து மீட்க குறைந்தது 6 முதல் 8 பேர் கொண்ட குழு தேவைப்படும்.

ஆனால், அந்தப் பகுதியில் மற்றவர்களின் உடலை மீட்பது ஒருபுறமிருக்க, மீட்பவர்களுக்கே உயிராபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்தாலும் பல இந்தியர்களின் உடல்கள் இன்னும் அங்கிருந்து மீட்கப்பட முடியாமல், பனிக்குகையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டன.