தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்த போண்டாமணி நேற்று இரவு உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த போண்டாமணி கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். நேற்று காலை டயாலிசிஸ் செய்து வீடு திரும்பிய போண்டா மணிக்கு இரவு 10.30 மணி அளவில் மீண்டும் உடல் நல குறைவு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வீட்டிலேயே சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.