பிரபல கிரிக்கெட் வீரரும், சமூக வலைதள பிரபலமுமான லக்கன் அர்ஜுன் ராவத் வீட்டில் பணிபுரிந்த சமையல்காரர், உணவில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க செயல் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

லக்கன் அர்ஜுன் ராவத்தின் வீட்டில் சமையல் பணிக்காக ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக அந்தப் பணியாளரின் நடவடிக்கையில் லக்கனின் மனைவிக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்தப் பணியாளர் சமையல் பாத்திரங்களிலும், உணவிலும் உமிழ்வது போன்ற அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனைப் பார்த்து லக்கன் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தச் சம்பவத்தின் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள லக்கன் அர்ஜுன் ராவத், “எங்கள் வீட்டுச் சமையல்காரர் பாத்திரங்களில் உமிழ்வதை சிசிடிவி கேமரா படம்பிடித்துள்ளது. வீட்டுப் பணியாளர்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். என் மனைவியின் சந்தேகத்தால் சிசிடிவி பொருத்தியது நல்லதாகப் போயிற்று. இதுபோன்ற சம்பவங்கள் இப்போது அதிகம் நடக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்களது பின்னணியைச் சரிபார்க்க வேண்டியதன்  அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நம்பிக்கையின் அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தும் குடும்பங்களுக்கு, இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. அதேசமயம், இது போன்ற புகார்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.