லக்னோவின் ஏகானா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. விராட் கோலியின் அதிரடியைக் காணக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

210 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆர்.சி.பி களமிறங்கியபோது, இரண்டாவது ஓவரை இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் வீசினார். அந்த ஓவரின் ஒரு பந்து 140.4 கி.மீ வேகத்தில் துல்லியமான ‘இன்சுவிங்கராக’ வந்து விராட் கோலியின் டிபென்ஸை உடைத்து ஆஃப்-ஸ்டம்பைப் பதம் பார்த்தது.

கோலி ரன் ஏதும் எடுக்காமல் ‘டக்-அவுட்’ ஆகி வெளியேறினார். தான் அவுட்டானதை நம்ப முடியாமல் அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோவை, ஐபிஎல் நிர்வாகம் “இந்தத் தொடரின் சிறந்த பந்து” என வர்ணித்துள்ளது.

முன்னதாக பேட்டிங் செய்த லக்னோ அணி, மழை குறுக்கீட்டிற்கு இடையிலும் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் ஆரம்பம் முதலே ஆர்.சி.பி பந்துவீச்சை சிதறடித்தார். வெறும் 20 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், மொத்தம் 56 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் விளாசினார்.

இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், மின்னல் வேகத்தில் 10 பந்துகளில் 32* ரன்கள் எடுத்து ஸ்கோரை 200-ஐ கடக்கச் செய்தார். ஆர்.சி.பி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் மார்ஷின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆர்.சி.பி, கோலியின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்ததால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.