தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அரசு பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மழை பெய்யும் போது அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அண்ணாமலை மீண்டும் விமர்சித்து x -பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில், அங்குள்ள தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரை மொத்தமாகப் பறந்து, அருகிலுள்ள வீட்டில் விழுந்து அந்த வீட்டின் கூரையையும் சேதப்படுத்தியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பகல் நேரத்தில், பள்ளிக் குழந்தைகள் இருக்கும் நேரத்தில் இது போன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், 10,000 புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம். அமைச்சர்கள் இத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டினோம் என்று ஆளுக்கொரு கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஒரு மலைப் பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை கூட, இந்த நான்கு ஆண்டு ஆட்சியில் சரி செய்யப்படவில்லை என்பதுதான் திமுக ஆட்சியின் உண்மையான அவல நிலை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் ஏற்கனவே பலமுறை கேட்டதையே மீண்டும் கேட்கிறோம். எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த ஊர்களில், இதுவரை புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருக்கிறீர்கள்?
நான்கு ஆண்டுகளாக திமுக அரசு வெற்று விளம்பரங்களுக்குச் செய்யும் செலவை, இத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டியுள்ளோம் என்று, முழு விவரங்களோடு விளம்பரம் செய்யலாமே? யார் உங்களைத் தடுக்கிறார்கள்?

“>