உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சதத்கஞ்ச் பகுதியில் ரூமிகா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் ராஜேஷ் திவாரி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஆயுஷ்மான் (15) அன்ஷுமான் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் நேற்று டிவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தபோது அன்ஷுமான் சேனலை மாற்றுமாறு ஆயுஷ்மானிடம் கூறியுள்ளார். ஆனால் ஆயுஷ்மான் மாற்ற முடியாது என்று கூறியதால் அவரை அன்ஷுமான் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த ரூமிகா இருவரையும் சமாதானப்படுத்தாமல் அவரும் ஆயுஷ்மானை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆயுஷ்மான் கோபத்தில் அறைக்குள் சென்று பூட்டி கொண்டார்.

கோபம் தணிந்தவுடன் மகன் வெளியே வருவான் என்று ரூமிகா விட்டுவிட்ட நிலையில் நீண்ட நேரம் ஆகியும் ஆயுஷ்மான் கதவை திறக்காததால் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது ஆயுஷ்மான் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைபபார்த்து அதிர்ச்சி அடைந்த ரூமிகா கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆயுஷ்மான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.