சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளில் கவர்ச்சியாக இளம்பெண் ஒருவர் உடைய அணிந்து வந்தார். அவர் தனக்கு உடனடி மருத்துவ தேவை இருப்பதாக கூறி தான் சொல்லும் எண்ணுக்கு அவசரமாக பணம் பரிவர்த்தனை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். அதன்படி கடைக்காரர் பணம் அனுப்பியவுடன் இளம்பெண் பேடிஎம் மூலம் “கியூ.ஆர் ஸ்கேனர்” பயன்படுத்தி பணம் அனுப்புவதாக கூறி கடைக்காரருடன் சாதுரியமாக பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பியுள்ளார்.

பின்னர் பணத்தை அனுப்பி விட்டதாக கூறி செல்போனில் போலியாக எடுத்து வைத்த ஸ்கிரீன்ஷாட்டை காண்பித்து விட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விடுவார். இதுகுறித்த புகாரின் பேரில் நூதன முறையில் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் தேடி வந்தனர். இதே பாணியில் தாம்பரம் பகுதியில் இருக்கும் செல்போன் கடையில் மோசடி செய்ய முயன்ற போது பொதுமக்கள் உதவியுடன் அந்த இளம் பெண் பிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஷெரில் கன்சால்வேஸ்(20) என்பதும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் அய்யன்சேரி பகுதியில் தனது சகோதரனுடன் தங்கி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதேபோல் சேலத்தில் இளம்பெண் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார். கவர்ச்சியாக உடை அணிந்தும், சதுரயமாக பேசியும் பல்வேறு கடைகளில் இளம்பெண் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்த இளம்பெண்ணின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.