ஜி-20 அமைப்பின் 2022 – 2023 -ஆம் ஆண்டு மாநாட்டிற்கான தலைமை பொறுப்பை தற்போது இந்தியா ஏற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களில் பல்வேறு துறைகளில் சார்பாக கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி சென்னையில்  கல்வித்துறை சார்ந்த ஜி-20 முதல் கல்வி பணிக்குழு மாநாடு கடந்த 31-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் மத்திய உயர் கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் மற்றும் 30 உறுப்பு விருந்தினர் நாடுகளில் பிரதிநிதிகள் என மொத்தம் 80 பேர் பங்கேற்றனர்.

மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கியுள்ள கல்வித்துறை சிக்கல்கள் மற்றும் கல்வியியல் மின்னணு தொழில்நுட்பங்களின் தாக்கம் போன்ற பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த மாநாடு முடிவடைந்த பின் மத்திய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜி- 20 உறுப்பு  நாடுகளில் மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பம் சார்ந்த சிறந்த கல்வி முறைகள் தொடர்பாக இந்த மாநாட்டில் அதிக அளவில் விவாதிக்கப்பட்டது. மேலும் உலக அளவில் பல்வேறு நாடுகள் சந்திக்கும் கல்வி சவால்களுக்கு நிலையான தீர்வுகளை கண்டறிவதற்காகவும் எதிர்காலத்தில் கல்வி கற்றல் திறனை மேம்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்படவும்  மற்ற நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளது.

தற்போதைய கால சூழலில் எண்ம தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்றலை  மேம்படுத்த உலகம் முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன்  செயல்பட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மூன்று கல்வி பணி குழு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள இறுதிக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுகிறது. அதே போல் பள்ளிகளில் இடைநிற்றலை  குறைப்பதற்காகவும், தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்காகவும் முக்கியத்துவம் வழங்கப்படும்.

அதன்படி தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக 50% பள்ளி குழந்தைகள் வரும் காலத்தில் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும் மாணவர்களின் திறன்கள் பற்றி மதிப்பீடு செய்வதற்கு ஒரு செயல் திட்டம் வகுக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் வருகிற மார்ச் 15-ஆம் தேதி அமிர்தசரஸில் நடைபெற உள்ள கூட்டத்தில் முன்வைக்கப்படுகிறது. அதேபோல் ஜி -20 மாநாடு சார்ந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.