கர்நாடக சட்டசபையில் கூட்டு மற்றும் பட்ஜெட்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்று சட்டசபையில் அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா உணர்ச்சி பூர்வமாக பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, எனது வாழ்க்கையின் கடைசி மூச்சு இருக்கும் வரை பா ஜனதாவை பலப்படுத்த நேர்மையாக உழைப்பேன். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சிலர் மோடி பா.ஜனதா  ஆர் எஸ் அமைப்பை எதிர்க்கும் மாய உலகில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று அப்படி செய்கின்றனர்.

ஆனால் அவர்களின் இந்த மாய உலகம் மிக விரைவிலேயே நொறுங்கிவிடும். அதேபோல் கர்நாடக சட்டசபை தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். பா.ஜனதா எனக்கு அநீதி இழைத்திருப்பதாகவும் புறக்கணித்து விட்டதாகவும் சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் பா ஜனதா மற்றும் பிரதமர் மோடி என்னை ஓரங்கட்டியதே  இல்லை. பிரதமர் மோடி எனக்கு உரிய பதவி மற்றும் கௌரவத்தை வழங்கியுள்ளார்.

இதற்காக அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கின்றேன். தேவேகவுடா எனக்கு ஒரு வழிகாட்டி அவரை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நான் அரசியலில் இந்த உயரத்திற்கு வளர ஆர்.எஸ்.எஸ் தான் காரணம். நான் அங்கு பயிற்சி பெற்றதால் தான் எனக்கு பல பதவிகள் கிடைத்துள்ளது. நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றேன். ஆனால் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து  கட்சியை ஆட்சியில் அமர்த்த பாடுபடுவேன் என பேசிள்ளார்.