மும்பை கல்யாண் இரயில் நிலையத்தில், ஓடிக்கொண்டிருந்த இரயிலில் இருந்து இறங்க முயன்றபோது நிலைதடுமாறி விழுந்த தாயையும், அவரது ஒரு வயது குழந்தையையும் இரயில்வே பாதுகாப்புப் படை  வீரர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், பிரயாக்ராஜில் இருந்து மும்பைக்கு பயணம் செய்த அந்தப் பெண், நகர்ந்து கொண்டிருந்த இரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்தார்.

அப்போது அங்கிருந்த உதவி ஆய்வாளர் ஹேமந்த் பார்குடே என்பவர், சற்றும் தாமதிக்காமல் ஓடிச் சென்று அவர்கள் இருவரையும் இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட பள்ளத்தில் விழாமல் தடுத்துக் காப்பாற்றினார்.

“ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா” என்ற திட்டத்தின் கீழ் துணிச்சலாகச் செயல்பட்ட அந்த வீரரின் இந்த மீட்பு நடவடிக்கை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய ஆர்.பி.எஃப் வீரருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

“>

 

ஓடும் இரயிலில் ஏறுவதும் இறங்குவதும் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.