குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள ஓல்பாட் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில், கோடை விடுமுறையைக் கழிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. கடந்த மார்ச் 23 அன்று, தலாட் கிராமத்தில் உள்ள ‘அக்ஷய் ரிசார்ட்’ நீச்சல் குளத்தில் 22 வயதான புருஷோத்தம் அசோக்பாய் சௌத்ரி என்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நேரத்தில் நீச்சல் குளத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் இருந்தும், ஒரு இளைஞர் உயிருக்குப் போராடியதை யாரும் கவனிக்காததுதான் மிகப்பெரிய சோகமாக மாறியுள்ளது.

​வெளியாகியுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளில், அந்த இளைஞர் நீரில் மூழ்காமல் இருக்க சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மேலாகக் கையைத் தூக்கி உதவி கோரிப் போராடுவது பதிவாகியுள்ளது. அவருக்கு மிக அருகிலேயே நண்பர்களும் மற்றவர்களும் நீந்திக் கொண்டிருந்த போதிலும், அவர் விளையாடுகிறார் என்று நினைத்தார்களோ என்னவோ, யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அவர் மயக்கமடைந்த பிறகுதான் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்தச் சம்பவம் கேளிக்கை விடுதிகளில் போதுமான பாதுகாப்பு வீரர்கள் (Lifeguards) இல்லையென்பதையும், மக்களின் அலட்சியத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.