கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் வீரபாகு தலைமையில் துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தினர்.

அப்போது ஹோட்டல், பேக்கரி, நடைபாதை வியாபாரிகளிடமிருந்து ஒரே நாளில் சுமார் 57 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அடுத்த முறை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்டுபிடித்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.