திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயி வலசு கிராமத்தில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னாத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்லமுத்து தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி நள்ளிரவில் வீட்டிற்கு வந்த செல்லமுத்து தனது மனைவியிடம் பூரி போட்டு தருமாறு கேட்டார். அதற்கு பொன்னாத்தாள் நள்ளிரவில் பூரி போட்டு தர முடியாது என கூறியதால் செல்லமுத்து கோபத்தில் தனது மனைவியை தாக்கி விட்டு தூங்க சென்றார்.

இதனை நினைத்து அழுது கொண்டே இருந்த பொன்னாத்தாள் திடீரென தனது வீட்டில் இருந்த எண்ணையை சூடாக காய்ச்சி தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் மீது ஊற்றினார். இதனால் வலி தாங்க முடியாமல் செல்லமுத்து அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் செல்லமுத்துவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே செல்லமுத்து தனது மனைவிதான் கொதிக்க, கொதிக்க எண்ணெயை தனது மீது ஊற்றி கொன்றதாக போலீசில் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.