துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தேடி அகதிகள் படகு மூலியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலமாக கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயற்சித்தனர். ஆனால் லிரோஸ் தீவுக் கூட்டம் அருகில் படகு வந்த போது கடற்பாறைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 41 பேரும் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நான்கு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேரை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக அகதிகளை தங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக துருக்கி அனுப்பி வைப்பதாக கிரீஸ் நாடு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.