மும்பை காந்திவலி கிழக்கு பகுதியில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் நபர் ஒருவர் கையில் கத்தியுடன் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாடா சாலை எண் 3-க்கு அருகில் உள்ள ஒரு மருந்து கடை மற்றும் மொபைல் கடைக்குள் புகுந்த அந்த நபர், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோவில், அந்த நபர் கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, செங்கற்களை வீசி எறிவதும், பின்னர் கத்தியை எடுத்து மிரட்டுவதும் பதிவாகியுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தின் போது அவர் வீசிய கற்கள் பட்டு இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். கடைக்காரர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்த நிலையில், அந்த மர்ம நபரின் அராஜகத்தால் அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் கடும் பீதியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.