ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்போது உலகையே அச்சுறுத்தும் ஒரு பயங்கரமான நிலையை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்கவில்லை என்றால், அந்நாட்டை வெறும் ஒரே நாளில் தரைமட்டமாக்கிவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரானின் எரிவாயு வயல்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பாலங்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

“செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள்” (கிழக்கு நேரம்) ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்ற தனது பிடிவாதத்தில் உறுதியாக இருக்கும் டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

“>

சர்வதேச சட்டங்கள் மற்றும் ஜெனீவா உடன்படிக்கையை மீறி இத்தகைய தாக்குதல்களை நடத்துவது ‘போர்க்குற்றமாகாது’ என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று டிரம்ப் அலட்சியமாகப் பதிலளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஈரானிய மக்களே தங்களை வந்து குண்டு வீசுமாறு கோருவதாகவும், விடுதலையை சுவாசிக்க அவர்கள் இந்த வலியைத் தாங்கிக்கொள்வார்கள் என்றும் அவர் விசித்திரமான ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்களைத் தகுந்த காரணமின்றி நியாயப்படுத்தும் டிரம்பின் இந்த ஆவேசப் பேச்சு, உலக அரங்கில் அமெரிக்காவிற்குப் பெரும் கண்டனங்களைத் தேடித் தந்துள்ள போதிலும், அவர் தனது ‘அழித்தொழிப்பு’ திட்டத்திலிருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை.