குஜராத் மாநிலம் சூரத்தின் தபோலி பகுதியில், ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே டெம்போவை ஓட்டியதால் ஏற்பட்ட கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 15 அன்று நிகழ்ந்த இந்த சம்பவத்தில், கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர், திடீரென எதிரே வந்த வாகனங்கள் மீது மோதினார்.

மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சியில், அதிவேகமாக வந்த டெம்போ மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர் சுமார் 5 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் மேலும் இரண்டு இருசக்கர வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்தன.

“>

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய டெம்போ ஓட்டுநர், முதல் மோதலுக்குப் பின்னரும் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து மூன்று வாகனங்கள் மீது மோதி, சுமார் 8 அடி தூரம் வரை சிலரை இழுத்துச் சென்றார். இந்த விபத்தில் சிக்கிய முதியவர் மற்றும் பிற இருசக்கர வாகன ஓட்டிகள் பலத்த காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஓட்டுநரின் பொறுப்பற்ற செயல் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.