“அதிநவீன ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறன் கொண்ட ஈரானால், தன் நாட்டு மக்களுக்கு ஏன் மலிவு விலையில் உணவையும் கார்களையும் வழங்க முடியவில்லை?” என்று அந்நாட்டின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் முஸ்தபா ஹஷேமிதாபா கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஈரான் தற்போது எதிர்கொண்டு வரும் உக்கிரமான பொருளாதார நெருக்கடி குறித்து எதெமாத் மற்றும் ஷார்க் நாளிதழ்களில் வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, போர்ச் சூழலும் பணவீக்கமும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் படுபாதாளத்திற்குத் தள்ளியுள்ளன. குறிப்பாக, 50 கிலோ டிரிபிள் பாஸ்பேட் உரத்தின் விலை சில மாதங்களிலேயே 3 மில்லியன் ரியால்களிலிருந்து அதிரடியாக 70 மில்லியன் ரியால்களாக (சுமார் 24 மடங்கு) உயர்ந்துள்ளதால் விவசாயம் மற்றும் கோழி வளர்ப்புத் தொழில்கள் முடங்கி வருகின்றன.

இதன் விளைவாக, தெஹ்ரானில் ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 1.5 மில்லியன் டோமான்களை (சுமார் ₹1,900) எட்டியுள்ளது; இது ஒரு சராசரி தொழிலாளியின் மாத வருமானத்தில் பத்தில் ஒரு பங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் பென்டகன் அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான சோதனைகளுக்காக மட்டுமே ஈரான் ₹1,600 கோடிக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ள நிலையில், உள்நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய இப்ராஹிம் ரைசி அரசாங்கம், மார்ச் மாதத்திற்குள் 100,000 மின்சாரக் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இறுதியில் தொழிற்சாலையில் ஒரே ஒரு காரை மட்டுமே காட்சிப்படுத்திய ஏமாற்று வேலை தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

போர் மற்றும் கடுமையான பொருளாதாரக் கொள்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை 1100%-க்கும் மேல் எகிறியுள்ளதால், சாதாரண மக்கள் அன்றாட உணவிற்கே வழியின்றித் தவிக்கும் அவலநிலை சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.