கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது. அப்போது பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த எஸ்வந்த்பூர் ஹவுரா ரயில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்தரயிலும் விபத்துக்குள்ளானது. மேலும் இதில் சரக்கு ரயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை 207 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மற்றும் 900-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒடிசா விபத்து காரணமாக கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நடக்க இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் ரத்து செய்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மட்டும் அவர் மரியாதை செலுத்துகிறார்.