ஒடிசாவில் ஜார்சுகுடா மாவட்டம் நகரில் உள்ள காந்தி சவுக்கில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் கலந்து கொள்வதற்காக சென்றபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டர் மூலமாக புவனேஸ்வரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. உடனடியாக அம் மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவரது உடல் கேப்பிட்டல் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு சபாநாயகர் விக்ரம் கேஷரி அரூக் துணை சபாநாயகர் ரஜினிகாந்த் சிங் மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு மாநில பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்படும். அங்கு அந்த கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவர். அதன் பின் ஹெலிகாப்டர் மூலமாக நவாதாசியில் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒடிசாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 29,30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்கள் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் முக்கியமாக உடல் தகனம் செய்யப்படும் இடத்திலும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. அரசு சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அமைச்சர் மீது துப்பாக்கி சூடு நடத்திய துணை காவல் ஆய்வாளர் கோபால்தாஸ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.