உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள முண்டகேடா முதன்மைப்பள்ளியில் வேலைபார்த்து வந்த சங்கீதா மிஸ்ரா என்ற உதவி ஆசிரியர், வகுப்பின் நேரத்தில் மாணவர்கள் முன் தலைக்கு மசாஜ் செய்தது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில், சங்கீதா மிஸ்ரா தனது நாற்காலியில் அமர்ந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்கிறார். மாணவர்கள் அதை பார்த்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில், அவரது மொபைலில் சினிமா பாடல்கள் ஒலிக்கின்றன.

இந்த காட்சி கல்வித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவர்களின் மேல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பள்ளி ஒழுங்கை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, மாவட்ட மூலக் கல்வி அலுவலர் (BSA) உடனடி நடவடிக்கை எடுத்து சங்கீதா மிஸ்ராவை இடைநீக்கம் செய்ததுடன், அவருக்கு எதிராக உள்பிரிவு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் பெற்றோர்களிடம் அவதூறாக நடந்துகொண்டதாகவும், கல்வி சூழலை பாதிப்பதாகவும் அவர் மீது மேலும் குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன.