விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவரது மகன் தர்ஷன் கள்ளக்குறிச்சி மாவட்டம் மடப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். சம்பவம் நடைபெற்ற அன்று ராமையா தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார். அப்போது தர்ஷன் அழுது கொண்டே பள்ளி ஆசிரியர் தன்னை அடித்து விட்டதாக தெரிவித்தார்.

தர்ஷனின் தலையில் வீக்கம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமையா பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து ராமையா திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காயமடைந்த தர்ஷன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.