வனவிலங்குகளிலேயே மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படும் முதலையிடமே வம்பு இழுக்கும் வகையில் நபர் ஒருவர் செய்த காரியம் தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மனிதர்களோ அல்லது விலங்குகளோ முதலையின் கண்ணில் பட்டால் தப்புவது கடினம். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், நிலப்பரப்பில் அசையாமல் கிடக்கும் ஒரு ராட்சத முதலையின் மீது நபர் ஒருவர் எவ்வித பயமுமின்றி அமர்ந்திருக்கிறார். அந்த முதலையும் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருக்கிறது.

அந்த நபர் முதலையின் முதுகுப் பகுதியில் அமர்ந்து கொண்டு, கேமராவை நோக்கி சிரித்தபடி விதவிதமான கோணங்களில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார். முதலையின் சுபாவம் எப்போது மாறும் என்று கணிக்க முடியாத சூழலில், உயிரைப் பணயம் வைத்து அவர் செய்துள்ள இந்தச் செயல் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது. ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த 29 விநாடி வீடியோவை இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“ஒருவேளை இருவரும் உறவினர்களாக இருப்பார்களோ?” என்று ஒருவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். “நிச்சயமாக இது வளர்ப்பு முதலையாகத்தான் இருக்க வேண்டும்” என்று மற்றொருவர் கூறியுள்ளார். “முதலை நகரவே இல்லை, ஒருவேளை அது இறந்திருக்கக்கூடும்” எனப் பலரும் தங்களது சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இருப்பினும், இது போன்ற ஆபத்தான விலங்குகளிடம் நெருங்குவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.