ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய மகளாக கூறப்படும் 22 வயது லூயிசா ரோசோவா, பாரிஸில் ஒரு உக்ரைனிய பத்திரிகையாளரால் எதிர்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தனது தந்தையின் உக்ரைன் போருக்காக “மிகவும் வருந்துகிறேன்” என்று மன்னிப்பு தெரிவித்தார். சமீபத்தில் ரஷ்ய வான்வழித் தாக்குதலில் அந்த பத்திரிகையாளரின் சகோதரர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் நகரின் தெருக்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில், முகமூடி அணிந்த ரோசோவா, தன்னைப் படம் பிடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு, “என்னால் எதையும் மாற்ற முடியாது… நடக்கும் விஷயங்களுக்கு நான் பொறுப்பல்ல” என்று கூறுவதை காணலாம். அவர் மீண்டும் மீண்டும் வருத்தம் தெரிவித்தாலும், போரைக் கட்டுப்படுத்துவதற்கோ, முடிவுக்குக் கொண்டுவருவதற்கோ தன்னிடம் அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார்.

நேர்காணல் நடத்திய உக்ரைனிய பத்திரிகையாளர் டிமிட்ரோ ஸ்வியாட்னென்கோ, “மூன்று வாரங்களுக்கு முன் உங்கள் தந்தை என் சகோதரனைக் கொன்றார்” என்று கூறி, ரோசோவா புடினின் போரை ஆதரிக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரோசோவா, “அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று பதிலளித்தார். பத்திரிகையாளர் குறைந்தபட்சம் தந்தையிடம் போரை நிறுத்தச் சொல்லலாம் என வலியுறுத்தியபோதும், ரோசோவா தன்னைத் தொடர்புப் படுத்த வேண்டாம் என்று கூறினார்.

 

உரையாடல் முடிவில், ரோசோவா பத்திரிகையாளரிடம் தனியாக இருக்க அனுமதி கேட்டும், இனிய மாலை நல்வாழ்த்துகளை தெரிவித்து அங்கிருந்து விலகிச் சென்றார். இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், உக்ரைன் போர் நான்காவது ஆண்டை நெருங்கியுள்ளது. சமாதான முயற்சிகள் இன்னும் எந்தவித முன்னேற்றமும் காணவில்லை.

இந்நிலையில்செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எலிசவெட்டா கிரிவோனோகிக் என்ற பெயரில் பிறந்த ரோசோவா, புடினின் இளைய குழந்தை எனும் வதந்தி பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. தற்போது அவர் பாரிஸில் வசித்து கலைப் பள்ளியில் பயின்று வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ரஷ்ய ஊடகமான புரோக்ட் வெளியிட்ட விசாரணை அறிக்கையின் மூலம் ரோசோவாவின் அடையாளம் முதல் முறையாக வெளிப்பட்டது. அவரது பிறப்புச் சான்றிதழில் “விளாடிமிரோவ்னா” என்ற தந்தைச் சேர்க்கைப் பெயர் இருப்பது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ரோசோவாவின் தாயார், போருக்குப் பிற்பட்ட காலத்தில், 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக மதிப்புடைய சொத்துக்களை வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் விவாகரத்து பெற்ற புடின், தனது தனிப்பட்ட குடும்ப விவரங்கள் குறித்து இதுவரை திறந்தவெளியில் பேசியதில்லை. அவருக்கு இரண்டு மூத்த மகள்கள் இருப்பதாக நம்பப்படுகிறது: மரியா வோரோன்ட்சோவா (40) – நாளமில்லா சுரப்பி தொடர்பான மருத்துவ நிபுணர் கேடரினா டிகோனோவா (39) – ஒரு திட்ட இயக்குநர். மேலும் புடின் சில நேரங்களில் தன்னிடம் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் உள்ளதாக மட்டுமே கூறியிருக்கிறார். ஆனால் ஒருபோதும் ரோசோவாவைத் தனது மகளாக அறிவித்ததில்லை.