மதுரையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதில், கடலூரைச் சேர்ந்த சேரன் என்ற நபர், மாநாடு நடைபெறும் திடலின் முன்பாக நின்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பேசினார்.

அவர், “ அமைதியாக அமர்ந்து மாநாட்டைப் பார்க்க வேண்டும்; குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்; சாலை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்று மைக்கில் உரத்து பேசினார். அவர் பேட்டி அளித்த போது, தனது மனைவி ஒரு விபத்தில் உயிரிழந்ததாகவும், அதைத் தொடர்ந்து சாலை விதிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் உருக்கமாகக் கூறினார்.

மேலும், சேரன் தனது பேட்டியில், விக்கிரவாண்டி மாநாட்டிலும் பங்கேற்றதாகவும், இந்த மாநாட்டிலும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். “கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு கட்சிகளின் ஆட்சியைப் பார்த்துவிட்டேன். இப்போது விஜய் அவர்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று நம்புகிறேன். இதற்கு இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக உழைக்க வேண்டும்” என்று அவர் ஆர்வத்துடன் கூறினார்.