2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறம் அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி ராமதாஸின் பாமக மற்றும் டிடிவி தினகரனின் அமமுக இணைந்து பலம் காட்டுகின்றன. மறுபுறம், திமுக கூட்டணியில் பாமக நிறுவனர் ராமதாஸ் இணைய விரும்புவதாகத் தகவல்கள் கசிகின்றன. ஆனால், இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், “பாஜக அல்லது பாமக இருக்கும் கூட்டணியில் விசிக ஒருபோதும் இருக்காது” என்பதில் 14 ஆண்டுகளாக உறுதியாக இருக்கிறார். திமுக கூட்டணியில் பாமக நுழைந்தால், விசிக வெளியேறுவது உறுதி என்ற அளவுக்கு நிலைமை இறுக்கமாக உள்ளது.
தேர்தல் காரணத்தினால் மருத்துவர் ராமதாஸும், நானும் பிரிய நேர்ந்தபோது… யாராவது எனக்கு துணை நின்றிருப்பார்களா? ஆறுதல் கூறினார்களா?… தொல்.திருமாவளவன் பேச்சு#Chennai | #Thirumavalavan | #VCK | #Ramadoss | #PMK pic.twitter.com/EZhxfeOKe9
— PttvOnlinenews (@PttvNewsX) January 30, 2026
இந்தச் சூழலில், பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ள திருமாவளவன், முன்பு தானும் ராமதாஸும் இணைந்து ‘தமிழ் பாதுகாப்பு இயக்கம்’ நடத்தியபோது, கூட்டணி மாற்றத்தால் இருவரும் பிரிந்ததை உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் வலுவான ராமதாஸ் பின்னாலேயே சென்றதாகவும், ஒருவர்கூடத் தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். பல போராட்டங்கள் மற்றும் அவமானங்களைக் கடந்துதான் இன்று தனது தலைமையைச் சமூகம் ஏற்கும் நிலைக்குத் தான் உயர்ந்திருப்பதாகத் திருமாவளவன் பேசியுள்ளது, வரப்போகும் தேர்தலில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு வித்திடுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
