தாய்லாந்தில் மாதம் ₹80,000 சம்பளத்தில் வேலை என்று டெலிகிராம் மூலம் வந்த ஆசையை நம்பிச் சென்ற டெல்லியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சச்சின், மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கி மியான்மரின் அபாயகரமான ‘கே.கே பார்க்’ பகுதிக்குக் கடத்தப்பட்டார்.

காடுகள் வழியாகக் கடத்திச் செல்லப்பட்ட அவர், அங்கு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களின் கண்காணிப்பில் சட்டவிரோத ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

சுமார் 36 நாட்கள் நரக வேதனையை அனுபவித்த அவர், இறுதியில் ₹4 லட்சம் பிணைத்தொகை செலுத்திய பின்னரே அங்கிருந்து விடுவிக்கப்பட்டு உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.

சச்சின் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து வந்தாலும், அவரைப் போலவே ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் இன்னும் மியான்மர் போன்ற நாடுகளில் சைபர் கிரைம் கும்பல்களிடம் சிக்கித் தவித்து வருகின்றனர்.

வெளிநாட்டு வேலை மற்றும் கைநிறைய சம்பளம் போன்ற விளம்பரங்களைக் காட்டி இளைஞர்களைக் குறிவைக்கும் இந்தக் கடத்தல் கும்பல்கள், அவர்களை அடிமைகளாக நடத்தி ஆன்லைன் மோசடிகளைச் செய்ய வைக்கின்றன.

“>

 

வேலையில்லாத இளைஞர்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொள்ளும் இது போன்ற மோசடி வலைதளங்கள் குறித்துப் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.