பொதுவாக, சிங்கங்களே யானைகளுடன் நேரடியாக மோதத் தயங்கும் நிலையில், ஒரு சிறிய தேன் பேட்ஜர் யானையை எதிர்கொள்வதைப் பார்க்கும் இந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு யானை அமைதியாக தனது நாளை கழித்து கொண்டிருக்கும் போது, பின்னால் இருந்து தேன் பேட்ஜர் ஒன்று திடீரென அருகில் வருவதை காணலாம்.

சாதாரணமாக எந்த விலங்கும் யானையை பார்த்தவுடன் நின்றுவிடும் அல்லது விலகிச் செல்லும். ஆனால், தேன் பேட்ஜர் அவ்வாறு செய்யாமல், நேராக யானையை நோக்கி சென்று அதைப் பயமுறுத்த முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த யானை, அதன் துணிச்சலைக் கண்டு பயந்து ஓடத் தொடங்கியது.

 

சிறிது தூரம் சென்ற பின்னர், யானை மீண்டும் திரும்பி, தேன் பேட்ஜரை தூரத்திலிருந்து எச்சரிக்க முயன்றது. ஆனால் தேன் பேட்ஜர் அதற்கும் அஞ்சாமல், தொடர்ந்து யானைக்கு சவால் விடுத்தது. இதனால், யானைக்கு ஒரு கடினமான தருணம் ஏற்பட்டதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வேடிக்கையும் வியப்பூட்டும் காட்சிகள் கொண்ட காணொளி, சமூக ஊடக தளமான X ல் @TheFigen_ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் 33 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ, இதுவரை 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான பயனர்கள் இதனை விரும்பி (லைக்) செய்துள்ளதுடன், பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோவை பார்த்த நெட்டிசன்களில் சிலர், தேன் பேட்ஜரின் அச்சமற்ற தைரியத்தைப் பாராட்டியுள்ளனர். மற்றவர்கள், யானையின் எதிர்பாராத பதற்றத்தை குறித்து நகைச்சுவையாக விமர்சித்துள்ளனர். “அளவு முக்கியமல்ல, தைரியமே முக்கியம்” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், “இதனால்தான் தேன் பேட்ஜர் உலகின் மிகவும் அச்சமற்ற விலங்கு என்று அழைக்கப்படுகிறது” என மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.