திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியில் இருந்து தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல திண்டிவனத்தில் இருந்தும் ஆரணிக்கு தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்துகள் சட்டதாங்கல் கூட்ரோட்டில் சந்தித்துக் கொண்டது. அப்போது நேர வித்தியாசம் காரணமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றது. அப்போது பேருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசுவது போல சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

இதற்கிடையே டிரைவர்கள் பேருந்துகளை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பயணிகள் சிலர் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டு பேருந்து டிரைவர்கள் பயணிகளை அச்சுறுத்த வேண்டாம் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.