இப்போதைய வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், மற்றும் பரபரப்பான அட்டவணை காரணமாக எடை அதிகரிப்பு என்பது பொதுவான பிரச்சனையாகி விட்டது. ஆனால், அதையே கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது பலருக்கு சவாலாக இருக்கிறது.
இந்த நிலையில், பெக்கா என்ற 25 வயது இளம்பெண், தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு, ஒரே ஒரு பழக்கத்தை பின்பற்றி 22 கிலோ எடையை வெற்றிகரமாக குறைத்துள்ளார். இவர் தனது பயணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
பெக்கா கூறுகையில், “எனக்கு உடற்பயிற்சி பிடிக்காது, விளையாட்டுகளிலும் ஆர்வம் இல்லை. சமைக்கவும் தெரியாது. அதிகமாக வெளியே சாப்பிடுவேன். மது அருந்தும் பழக்கமும் இருந்தது. இவையெல்லாம் சேர்ந்து என் எடையை வேகமாக உயர்த்தின.” என்கிறார்.
24வது வயதில் ராணுவத்திலிருந்து வந்தபோது, 22 கிலோ எடை அதிகரித்திருந்தது. உடல் நலக் கோளாறுகள் ஏற்படத் தொடங்கியதும், தன்னையே வெறுக்கத் தொடங்கிய பெக்கா, மாற்றத்தை தேடியபோது, “நடைப்பயிற்சியை” நம்பினார்
தினமும் 30 நிமிடங்கள் நடக்கத் தொடங்கிய பெக்கா, பின்னர் அதை நாளுக்கு 16 கி.மீ. நடக்கும் அளவிற்கு உயர்த்தினார். இந்த நடைப்பயிற்சி அவரது உடலை மட்டுமில்லாமல், மனநிலையையும் மாற்றியதாக தெரிவிக்கிறார்.
அதிக எடையை தூக்கும் வகையிலான கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய விருப்பம் இல்லாத இவர், நடைப்பயிற்சியிலேயே முழுமையாக குவிந்தார். அதேசமயம், தனது பழைய பழக்கங்களை முற்றிலுமாக தவிர்த்து, மதுவை முற்றிலும் கைவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சேர்த்துள்ளார்.
“மதுவில் அதிக கலோரிகள் இருக்கின்றன. தினமும் ஒரு பாட்டில் மது அருந்தியதால்தான் என் எடை அதிகரித்தது. ஆனால் அதை விட்ட பிறகு என் வாழ்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது” என பெக்கா கூறுகிறார்.
தற்போது தனது வாழ்நிலை, ஆரோக்கிய உணவுகள் மற்றும் நடைப்பயிற்சியில் கவனம் செலுத்துவதால் தான், 22 கிலோ எடையை எளிதாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த பயணம், எடைக் குறைப்பில் தவிக்கிற அனைவருக்கும் ஒரு முக்கியமான உதாரணமாக அமைந்துள்ளது.
