உத்தரபிரதேச மாநிலத்தின் எட்டாவா மாவட்டம் ரஹத்பூர் கிராமத்தில் ஒரு பெண் தனது வயதான மாமனாரை கட்டிலில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில், மருமகள் சுபத்ரா தனது தந்தையுடன் சேர்ந்து மாமனார் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமனாரின் இரண்டு கைகளையும் கட்டி வைத்தபின், இருவரும் சேர்ந்து அவரை அடித்த காட்சிகள் அந்த வீடியோவில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் நேரிலேயே பகவான் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகன் தர்மேந்திராவுக்கு சுபத்ராவை ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணத்துக்குப் பிறகு குழந்தை பெற்ற பெண் தற்போது தனது கணவனுடன் வாழ மறுப்பதாகவும், தனது குடும்பத்தில் சேருமாறு கூறியதற்குப் பதிலாக தந்தையுடன் சேர்ந்து வீடிற்கு வந்து தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது போலீசார் மருமகள் மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.