கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் ஒரு இளம்பெண் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “ஒரு கட்சிக்கு வாலன்டியர்கள் அவசியம், ஆனால் அவர்கள் மக்களின் நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். கூட்டங்களில் பெண்கள், குழந்தைகள் தண்ணீர் கூட இல்லாமல் நின்றுகொண்டு இருந்தபோது, உங்கள் தொண்டர்கள் தண்ணீர் கொடுக்கவோ, உதவியளிக்கவோ முடியவில்லை. இது அடிப்படை அரசியல் நெறிமுறையே இல்லாததைக் காட்டுகிறது,” என்று அவர் கூறியுள்ளார். மேலும், “உங்கள் தொண்டர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டுமென நீங்கள் கூறியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. ஆனால் நீங்கள் ரசிகர்கள் உங்களைப் பார்த்தவுடன் கைத்தட்டவும், மரத்தில் ஏறி ஆரவாரம் செய்யவும் எதிர்பார்க்கிறீர்கள்” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.

அத்துடன், “இந்த நிகழ்வுக்குப் பிறகு நீங்கள் ஆறுதல் தெரிவிக்க கூட 68 மணி நேரம் எடுத்தீர்கள். அதிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறாமல், அரசியல் விமர்சனத்திலேயே கவனம் செலுத்தினீர்கள். இது ஒரு தலைவருக்கான மனப்பான்மை அல்ல. 2026 இல் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பெரிய ஆபத்தில் சிக்கிவிடும். படித்தவர்கள் ஒருபோதும் இத்தகைய கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்” எனவும் அந்த இளம்பெண் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். அவரது இந்த உருக்கமான பதிவுகள் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன