ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை நியமிப்பதாக அறிவித்துள்ள நிலையில் இருவரும் பாஜகவின் ஆதரவை கேட்டுள்ளனர். இவர்களில் யாருக்கு பாஜக ஆதரவு கொடுக்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயம். ஏனெனில் டெல்லி எடுக்கும் முடிவை பொறுத்துதான் அதிமுக யாருக்கு சொந்தமாகும் என்பதை தெரியவரும் என்பதால் பாஜக அதை மனதில் வைத்துக் கொண்டே ஆதரவு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் எடப்பாடி வேட்பாளரை அறிவித்த பிறகு ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளரை அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனராம். இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் 106 பேர் கொண்ட குழுவை தேர்தல் பணிக்காக எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். இவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு களத்தில் குதித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.