மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் ‘சவுத் பார்ஸ்’ (South Pars) இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேலிய விமானப்படை முதன்முறையாக வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் முறையான ஒப்புதலைப் பெற்ற பின்னரே இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உயர்மட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இ

ஈரானின் அசலுயே (Asaluyeh) பகுதியில் அமைந்துள்ள பல எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் பாய்ந்தன. இதனால் அந்த வளாகம் முழுவதும் பெரும் தீப்பிழம்புகளும், கரும் புகையும் சூழ்ந்துள்ளன. ஈரானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் முடக்கும் நோக்கில், அதன் முக்கிய எரிசக்தி மையங்களை இஸ்ரேல் தற்போது இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது. இது இஸ்ரேலின் போர்த்திறனில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.


இந்தத் தாக்குதலுக்கு “அமெரிக்க-சியோனிச எதிரிகளே” காரணம் என ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இதற்குப் பதிலடியாகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ள ஈரான், அண்டை நாடுகளான சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் தங்களின் எரிசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இது ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்திலும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல்களில் ஒன்றான சவுத் பார்ஸ் சேதமடைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் விலையில் கடும் உயர்வு ஏற்படக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர். மேலும் இதற்கு பதிலடியாக கத்தார் எண்ணெய் வயல் மீது ஈரான் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.