ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், சமையலறையில் வைத்திருந்த கொதிக்கும் பால் நிரம்பிய கொள்கலனில் தவறி விழுந்த 17 மாதச் சிறுமி உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் செப்டம்பர் 20 ஆம் தேதி சனிக்கிழமை நிகழ்ந்தது. அதாவது புக்கராயசமுத்திரம் மண்டலத்தில் உள்ள கோரபாடு அருகே அமைந்துள்ள அம்பேத்கர் குருகுல் பள்ளியின் சமையலறையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியதால், அந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

உயிரிழந்த சிறுமி அக்ஷிதா, அந்த பள்ளியில்  பணியாற்றும் கிருஷ்ணா வேணியின் மகளாவார். சம்பவ நாளன்று, கிருஷ்ணா வேணி தனது குழந்தையை பணிக்கு அழைத்துச் சென்றிருந்தார். தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், சிறுமி சமையலறையின் அருகில் தனியாக விளையாட அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகளின் படி, முதலில் தாயுடன் சமையலறைக்கு சென்ற சிறுமி, பின்னர் தனியாக பூனையை பின் தொடர்ந்தவாறு மீண்டும் அறைக்குள் சென்று, கொதிக்கும் பால் நிரம்பிய கொள்கலனின் அருகில் சென்றபோது தவறி அதன் உள்ளே விழுந்தார்.

இதில் குழந்தை வலியால் அலறி துடித்த நிலையில் உடனடியாக அதனை விட்டு வெளியேற முயற்சித்தது. இருப்பினும் குழந்தையால் வெளியே வர முடியாத நிலையில் தாயும் ஓடி வந்து தன் குழந்தையை மீட்டார். ஆனால் பால் மிகவும் கொதித்துக் கொண்டிருந்ததால் குழந்தை உடல் வெந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.